Monday, January 14, 2013

ஹாப்பி பொங்கல்!!!!!!!!!!!


ஒரு டெல்டா விவசாயியின் பொங்கல் வாழ்த்துப்பா:



குறுவை,  சம்பா,  தாளடி  எல்லாம் 
பொய்த்துப் போன நிலையிலும்
நான் கூவுவேன் 'ஹாப்பி  பொங்கல்'.

பொங்கல்  பானையில போடக் கூட 
அரிசி இல்லாத  கொடுமையிலும் 
நான் உரைப்பேன்  'ஹாப்பி பொங்கல்' 

போர்வெல் இருந்தாலும் கரண்ட் இல்லாமல்
கையைப் பிசைந்து நிற்கும் நிலையிலும்
நான் கர்ஜிப்பேன் 'ஹாப்பி  பொங்கல்'.

வாங்கின கடனுக்கு வட்டி கட்ட  
கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும் 
ஞான்  பறையும்  'ஹோப்பி பொங்கல்'.

அமைச்சர்கள் குழு வந்து பார்த்திருக்கு
நிவாரணத்தை எதிர்நோக்கி என் காஞ்ச வயல் காத்திருக்கு
ஆகவே நான் செப்புவேன் 'ஹாப்பி பொங்கல்' 

காவிரி ஆறுல வரலைனா என்ன ?
டாஸ்மாக்ல பாருல வருதுடா தண்ணி.
அதனால நான் 'சத்தமாச் சலம்புவேன்'.
'ஹாப்பியோ  ஹாப்பி  பொங்கல் டு ஆல் டமிலன்ஸ்!'



Saturday, January 12, 2013

சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.




கொல்கத்தா நகரத்தில் ப்ளேக் நோய் தன்  கோரதாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த காலத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பாக சுவாமி விவேகானந்தர் நோயால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காகத் தொண்டற்றிவந்தார். அப்போது ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் சீடர்கள் என்ன செய்வது என்று விவேகானந்த சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அதற்கு விவேகானந்தர் 'மடத்தையும் அதன் சொத்துக்களையும் விற்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது நிதி திரட்டி வேண்டிய மருந்துப் பொருட்களை வாங்குவோம், இந்த நோயை விரட்டி அடிப்போம், துயர் தீர்ந்த பின் மறுபடியும் மக்களிடம் கை ஏந்திச் சென்று நிதி பெற்று மடத்தைக் கட்டிக் கொள்வோம்' என்று ஆலோசனை வழங்கினார்.  மடத்தை விற்றேனும் மக்கள் துயர் துடைக்க எழுந்த மகான் எங்கே, மடத்தைக் காக்க நீதிமன்றப் படியேறிப் போராடிக்கொண்டிருக்கும் பதர்கள் எங்கே? இன்று அவரது நூற்றைம்பதாவது பிறந்தநாள். சுவாமி விவேகானந்தர் என்கிற பெயரைச் சொன்னாலே கம்பீரம், தைரியம், பொறுமை, வீரம் எல்லாம் பீறிட்டு எழும்.  என்றைக்கும் குன்றாத இளமை வேண்டும் என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் சொன்னது சுவாமி விவேகானந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவருக்கு மட்டுமே அது  பொருந்தும்.  எத்தனயோ மகான்கள் இந்த ஞான பூமியிலே, அவர்களில் ஒருவராம்  சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.


Tuesday, January 8, 2013

கார்த்திக் ராஜா

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெகு நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜாவைப் பார்க்க நேர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்களைக் கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் ஆசாமிகள் பலருக்கு கார்த்திக் ராஜாவைத் தெரியவில்லை. இவர்  ம்யுசிக் எல்லாம் கம்போஸ் பண்ணுவாரா என்று கேட்டு என்னை கதி கலங்க வைத்தார்கள். கார்த்திக் ராஜாவின் இசையில் 'அலெக்சாண்டர்' திரைப்படம்  வெளிவந்தபோது (1996) அந்தப் படத்தின் 'நதியோரம்' பாடல் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட், கல்யாண வீடுகள், பிரைவேட் பஸ்கள் எல்லாம் அந்தப் பாடலைப் பலமுறை ஒலிபரப்பி, ஒலிபரப்பி அந்தப்  பாடல் பிரபலம் ஆகியது. இப்போது யார் இவரு என்று கார்த்திக் ராஜாவைக் கேட்பவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு அலெக்ஸாண்டர்  படமும் நதியோரம் பாடலும் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம்  கார்த்திக் ராஜாவுக்கு பெரிய மவுசு இருந்தது.  பின்னர்  அவருக்கு ஏன் பெரிய வெற்றிகள் இல்லை என்பது எனக்கு இன்னமும் புரிய வில்லை.  வெகு நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு  அந்தப் பாடலை Youtube-ல் கேட்டு இன்புற்றேன். உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரிணி பாடிய பாடல். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  Link for the Song