ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது எப்படி என்று ஒரு உத்தமன் என்னை வெகு நாட்களாகத் தொல்லை செய்து கொண்டிருக்கிறார். ஆராய்ச்சி என்பது இறைச்சியில் எதோ ஒரு வகை என்று நினைக்கும் அல்பப் பிரகிருதி நான். என்னைப்போய் இப்படிக் கேட்கும் ஒருவருக்கு நிச்சயம் அஷ்டமத்துச் சனி உச்சியில் இருக்கும் என்பது திண்ணம். அவரின் நீண்ட முயற்சிகள் என் கல் மனத்தைக் கரைத்து, ஆராய்ச்சி என்றால் என்ன என்று பல பேரிடம் கேட்டு நான் அறிந்தவற்றை அவருக்கு விளக்கினேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பின், 'என்ன வாத்தியாரு நீங்க..... ஒரு உதாரணம் கூட சொல்ல மாட்டேன்கிறீங்க?' என்று பிராண்டி என்னை அதிர வைத்தார். மறுபடி பலரிடம் போய் ஆராய்சிக்கு உதாரணம் சொல்லுங்க என்றால் என் பரந்த முதுகு ரணம் ஆகிவிடும் என்பதால், நானே சொந்தமாக (!?) யோசித்து ஒரு சாம்பிள் குடுத்தேன். அதைக்கேட்ட பிறகு உத்தமன் என்னை கொலை செய்துவிடுவது போல் கொஞ்ச நேரம் கொடூரமாகப் பார்த்துவிட்டு பின் தலை தெறிக்க ஓடிவிட்டார் (ஹையா ஜாலி).
அந்த உதார் 'ரணத்தைக்' கீழே கொடுத்துள்ளேன்.
Disclaimer: படித்துவிட்டு அடிக்க வரக்க கூடாது. மீ பாவம்.
Title: இட்லியாராய்ச்சி
Abstract:
நாம் உண்ணும் பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் சிறந்தது இட்லி. அதை உண்ணும் முறை யாது ?
Introduction:
இட்லி என்கிற உணவு தமிழனுடைய வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்று சொன்னால் மிகையாகது. நாலு இட்லி சாப்பிடுவதற்காக நானூறு மைல் பயணம் செய்யும் தமிழர்கள் பலர் அமெரிக்காவில் உண்டு. பிடித்த நடிகைகளின் பெயரை அதற்குச் சூட்டி மகிழ்ந்தவர்கள் நாம் [1]. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். அதிலே அடங்கி இருக்கிற சத்துக்கள் குறித்து பல்வேறு மருத்துவர்கள் கட்டுரைகளை எழுதிக் குவிக்கிறார்கள். இன்னமும் ஒரு கல்யாணம் விசேஷம் என்றால் காலை உணவில் இட்லி இல்லாவிட்டால் ரத்தக்களறி ஆகும் அபாயம் உண்டு.
Problem Description:
இட்லி குறித்து மேலும் பல தகவல்களை அடுக்கி உங்களை வெறுப்பேற்றுவது என் நோக்கமல்ல. இட்லியை உற்று நோக்கும்போது எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன. அவையாவன:
- தமிழன் இட்லியை எவ்வாறு உண்ண வேண்டும் ?
- நமது வாழ்வில் ஒன்றாகிவிட்ட இந்த இட்லி என்கிற பதார்த்தத்தை உண்ணும்போது தமிழனின் வாழ்வியல், மரபு மற்றும் கலாச்சாரம் ஆகியன பேணிக்காக்கப்பட வேண்டாமா ?
Research Process:
வேறன்ன? பந்தியில், ஹோட்டலில், பிற விசேஷங்களில் கலந்துகொண்டு சாப்பிடும் எல்லோரையும் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருப்பது!
Results:
இவற்றுக்கு விடை தேடி நான் கண்டுகொண்ட சில உண்மைகள்:
- இட்லியை ஒரு ஸ்பூனால் இன்சிசன் செய்து உண்பது தமிழனின் கலாசார மரபுக்கு எதிரானது. (அதமம்)
- கையால் விண்டு, கிண்ணத்தில் இருக்கும் சாம்பாரில் தொட்டு உண்ணும் முறை சிறந்தது அல்ல என்றாலும் சரி போகட்டும் என்று விதிவிலக்கு (Exception) குடுக்கலாம் (மத்திமம்)
- இட்லியை ஒரு தட்டில் போட்டு, சாளக்கிராம மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்வது போல் சாம்பாரை மெல்ல மேலே விட்டு, ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. தூரத்தில் இருந்து நோக்கும் மக்களுக்கு தெப்பக்குளத்தின் (சாம்பார்) நடுவே உள்ள நீராழி மண்டபத்தைப் (இட்லி) போல் காட்சி அளிக்கவேண்டும். (உத்தமம்)
Conclusion
மேலே சொன்னவாறு தாங்கள் இட்லியை உண்டு வந்தால், தமிழனின் மரபும், சிறப்புகளும் எந்நாளும் செழிக்கும் என்பதில் எவ்வித ஐயமும்மில்லை என்பது மேற்கண்ட தீவிர ஆராய்ச்சியின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
References
1.http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
2. இன்னபிற