Tuesday, April 27, 2010
வாழ்க வளமுடன்!
Sunday, April 25, 2010
தமிழன் என்றொரு இனமுண்டு....
Thursday, April 8, 2010
வெயில் புராணம்
வெயில் சன்னதம் கொண்டவனைப் போல் ஆக்ரோஷமாக ஆடுகிறது. அதன்ஒங்காரவேட்டையை நம்மால் உணரமுடிகிறது. யாராலும் தடுக்க முடியாத ஒரு போர் வீரனைப் போல் அது எல்லோரையும் முதுகில் அறைகிறது. வியர்வை கசகசக்கும் ஆடைகள் மனிதர்களை சொற்கள் அற்ற முரடர்கள் ஆக மாற்றி விடுகின்றன. அவனது அன்பான சொற்களை அவனிடமிருந்து பறித்து கொண்டுவிடுகிறது. கசக்கி எறியப்பட்ட காகிதம் போல வெம்மை நம்மை அலைக்கழிக்கிறது.
மனிதர்களின் சொற்களில் வெம்மையின் கொடூரம் களிம்பேறி இருக்கிறது. அரசமரத்தடி விநாயகர் நீர்கண்டு பல நாள் ஆன குகை மனிதனைப் போல தோற்றமளிக்கிறார். கோடையில் குருவிகள் நீர் அருந்துவதற்கு ஏதுவாக கல்லில் கிண்ணம் அடித்து நீர்ரூற்றி வைக்கிற வழக்கம் முற்றிலுமாக வழக்கொழிந்து விட்டதென்றே நினைகிறேன். மந்திக் குரங்குகள் மதிய நேரத்தில் குட்டிக் குரங்குகள் சகிதம் தொட்டி நீரில் அமிழ்ந்து ஆனந்தமாகக் குதியாட்டம் போடுகின்றன. சுதத்திரமான ஒரு ஜீவன் இன்று நீருக்காக மனிதனிடம் கையேந்திஇருக்கிறது.
அடிக்கிற வெயிலுக்கு நாமும் எதாவது குளம் குட்டையில் விழுந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தென்கரை வாய்கால் ஒன்று ஊரில் ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் எருமை மாடுகள் நன்கு நீரில் மூழ்கி, கரையோரம் இருக்கிற காந்தழ் பூக்களைத் தின்று கொண்டிருக்கும். வெயில் காலங்களில்,ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேஇருக்கிற வாய்க்காலில் விளையாடி முடித்து விட்டு குளிக்க வேண்டும் என்கிற ஆசை பலமுறை வந்திருக்கிறது.அதன் ஆழமும் சுழற்சியும் அதிகம் என்பதால் அப்பா அதில் குளிக்க விடமாட்டார். பலமுறை கேட்டும் அனுமதி கிடைத்ததில்லை. அவரது பத்தாம் நாள்காரியத்தின் போது தான் குளிக்க நேர்ந்தது. ஒரு வரட்டுப் புன்னகையுடன் முங்கி எழுந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் துஷ்டி வீடுகளுக்குப் போய் வருகையில் மட்டுமே குளிக்க நேருகிறது வாய்க்காலில்.
நாய்கள் கூட மர நிழலில் அசைவற்றுப் படுத்துக்கிடக்கின்றன. தெருவெங்கும் மழை நீரைப் போலே வெயில் வழிந்து ஓடுகிறது. கையில் ஒட்டிக்கொண்ட அழுக்கு போல வெயில் நம்மைப் பிரிய மறுக்கிறது. ஆனாலும் நான் கோடையைக் கண்டு மிரளுவதில்லை.வெம்மை என் வாழ்வோடு இணைந்திருக்கிறது.