Wednesday, July 24, 2013

பழம் நீங்கள் அப்பா, ஞானப்பழம் நீங்கள் அப்பா ;)

மோடிக்கு விசா தரக்கூடாது என்று மடல் வரையும் மகான்களே,

பேத்தியின் பேறுகால உதவிக்குச் செல்லும் பாட்டிகளின் விசாக்கள் மறுக்கப்படுவது குறித்துக் கிஞ்சித்தேனும் கவலை கொண்டதுண்டா ?

வால்மார்ட் உள்ளே வந்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்மாட்டில் கடனே என உட்கார்ந்து இருந்துவிட்டு இப்போது என் இத்தனை ஆர்ப்பாட்டம் ?

அட்லாண்டாவில் நாக்கு செத்துக் கிடக்கும் நம்ம ஊர் நமச்சிவாயத்திற்கு அவன் தாய் தன் கையால் செய்த ஆவக்கா உறுகாயையும் தளி வடாத்தையும் அரிசி அப்பளாத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்காத அமெரிக்க இமிக்ரேஷன் மீது கோபம் கொண்டு தாங்கள் ஒரு கடிதம் கூட எழுதவில்லையே ஏன் ?
 

Monday, July 22, 2013

அனுதாபம் தெரிவிப்போருக்கு என் அனுதாபங்கள்

 
ஒருவரது மரணத்திற்கு சமூக வலைதளங்களில் அனுதாபம் தெரிவிக்கப் போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ள சில கேள்விகள் உள்ளன.

1) இறந்தவர் திரைப் பிரபலமா ?
2) இறந்தவர் அரசியல் பிரபலமா ?
3) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரா ?

இந்தக் கேள்விகள்  மூன்றுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் நீங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கலாம்.

திரைப் பிரபலமா  என்கிற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தால், நீங்கள் துணிந்து களம் இறங்கலாம். இவன் அப்டி என்ன கிழிச்சுப்புட்டான் என்கிற ரீதியில் பதில்கள் வரும், அதைக் கண்டு அஞ்சுவது பேதைமை. இது போதாதென்று செத்தவன் ஜாதியைக் குறித்து தாறுமாறாக விமர்சனங்கள் வரும், இதற்கு நாமார்க்குங் குடியல்லோம் என்பது போலத் துணிந்து  பதிலுரைக்க (குரைக்க)  வேண்டும்.

இரண்டாவது: கேள்வி எளிது. அரசியல் பிரபலம் என்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவர் என்கிற மாதிரி ஓரிரு சொற்களைச் சேர்த்து இரங்கலைத் தெரிவித்தால், யாரும் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

மூன்றாவது: பெரும்பான்மை சமூகத்தவர் என்றால், வாய் மற்றும் இன்ன பிறவற்றை அடைத்து அமைதி காத்தருளி, எதாவது 1980 களில் வந்த இளையராஜா பாடல் ஒன்றைப் பற்றி சிலாகித்து 4 வரி எழுதிவிட்டு ஜென் நிலையில் இருப்பது சாலச் சிறந்தது. நமது தேசம் மதச்சார்பற்றது. சினிமா சார்பற்றது என்றோ அரசியல் சார்பற்றது என்றோ இல்லை.  மறந்துவிடக்கூடாது.