Tuesday, April 27, 2010

வாழ்க வளமுடன்!

சமீபத்தில் ஒரு மூதாட்டி தனது உடல் நிலை சீரானபடி இல்லாததால், சிகிச்சைக்காக தமிழகம் வந்திருக்கிறார். எவ்வகையிலும் சமூகத்தின் அமைதிக்கு அவர் குந்தகம் விளைவிக்கப் போவதில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும், அவரை விமானத்திலேயே நிறுத்தி, தமிழகத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டிருகிறது. பாதுகாப்பு காரணங்கள் காட்டி, வந்த முதியோரை விரட்டி அடித்திருக்கிறது, சங்கத்தமிழ் பேசும் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடி(?! டாஸ்மாக் நினைவுக்கு வந்தால், நான் பொறுப்பல்ல).

தமிழனைப் பொறுத்தவரையில் "அன்பிலர் எல்லாம் தமக்குரியர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. யாதும் ஊரே, யாவரும் கேளிர்" போன்ற கலாச்சாரப் பேச்சுக்கள் பட்டிமண்டபங்களுக்கும், அரசியல் மேடைகளுக்கும், கல்வெட்டுகளுக்கு மட்டுமே, நிஜ வாழ்கைக்கு இல்லை என்று பறைசாற்றுகிறதாக இருக்கிறது இந்நிகழ்வு. தமிழனின் நிஜ முகம் - பயமும், மறதியும். அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்ற பாரதியின் கூற்று மறுபடியும் நிருபணமாகி இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், தரம் நிறைந்த மருத்துவமனைகள், ஆசியாவிலேயே சிறந்த மருத்துவ மையங்கள் நிறைந்த நகரம் சென்னை என்று சொல்லிகொள்வதில் ஒரு பெருமையும் இல்லை. சிகிச்சை அவசியமாய் இருப்பவர்களை, மருத்துவம் காக்கும் என நம்பி வருவோரை திருப்பி அனுப்பும் குணம் வாய்ந்தோர் உள்ள செந்தமிழ்நாடு ஒருபுறம் என்றால், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் மகள், IPL போட்டிகளுக்காக ஒரு விமானத்தை வழி மாற்றி இருக்கிறார். ரொம்ப முக்கியம்!

வாழ்க தமிழ் நாடு. ஓங்குக தமிழன் புகழ்!

2 comments:

Newton said...

Bala, most of your posts are good one. I am big fan of your blogs. I was silent reader all the time and want to show my presence to you.

Thanks
Newton

Bala Venkatraman said...

Thanx a ton Newton!